தம்மபதம்
இலங்கை நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவியான நில்வக்கே ஸோமானந்த தேரா பாலி மொழியிலிருந்து புத்தரின் தம்மபதத்தை மிகச் சிறந்த முறையில் தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.. வெகு நம்பகமானதாகவும் முழுமையானதாகவும் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருப்பதால் முனைவர் ரமணி தமக்கே உரிய தெளிவான வாசிப்பில் ஒலிநூலாகப் படைத்துள்ளார்.
இந்நூல் மனதை ஒருமுகப்படுத்துதல், அறநெறி, கோபம் தணித்தல், அன்பு, மற்றும் விழிப்புணர்வு போன்ற பல தலைப்புகளில் புத்தரின் சிந்தனைகளைத் தொகுத்து வழங்குகிறது. இந்துக்களுக்கு பகவத்கீதை எவ்வாறு வழிகாட்டியாக உள்ளதோ, அதேபோல பௌத்தர்களுக்கு இந்த தம்மபதம் ஆன்மீக வழிகாட்டியாக விளங்குகிறது.
தம்மபதம் பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்மபதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது. தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இதனால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது. தம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின்படி தம்மபதத்தின் ஒவ்வொரு வரியும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பதில் தர புத்தரால் சொல்லப்பட்டது. இதைப் பற்றி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தகோஷர் (தமிழகத்திலும் வாழ்ந்தவர்) அக்காலத்திலேயே மிகப் பழைய சான்றுகளை வைத்து உரை எழுதியிருக்கிறார். துறவிகளுக்கு சொல்லப்பட்டதென்றாலும், இவ்வரிகள் எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் எந்த சூழ்நிலைக்கும் பொருத்தமான வரிகளாக அமைகின்றன.
Praise

